முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, 2-வது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னையை அடுத்த ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து சிகிச்சை அளிக்க சிறுமியின் பெற்றோரிடம் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவ முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.கடந்த 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2வது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்திய முதலைமைச்சர், தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சிறுமி டானியாவின் தாய் சௌபாக்கியம், தனது இல்லத்திற்கு நேரில் வந்து மகளை நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.