9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணாகியுள்ளதாக இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணாகியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி…

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணாகியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய மக்களின்‌ நல்வாழ்வுக்காக அல்லும்‌ பகலும்‌ அயராது உழைத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும்‌, அவருக்குப் பிறகு செயல்பட்ட கழக ஆட்சியிலும்‌ நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களைத்‌ துவக்கி வைப்பதும்‌, ஜெயலலிதாவின் பெயரால்‌ நடைபெற்று வந்த பல மக்கள்‌ நலத்‌ திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவதையுமே குறிக்கோளாகக்‌ கொண்டு செயல்பட்டு வரும்‌ இந்த திமுக ஆட்சியில்‌, சுமார்‌ 9 லட்சம்‌ டன்‌ ரேஷன்‌ அரிசி புழுத்துப்போய்‌, பாழாய்ப்‌ போனதாக மத்திய அரசின்‌ இந்திய உணவுக்‌ கழகம்‌ ஆதாரத்துடன்‌ குற்றம்‌ சாட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களுக்கு விவசாயிகள்‌ கொண்டுவரும்‌ நெல்லை, உரிய நேரத்தில்‌ கொள்முதல்‌ செய்யாத காரணத்தால்‌ அவை மழையில்‌ நனைந்தும்‌, வெயிலில்‌ காய்ந்தும்‌ போவதால்‌ விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டம்‌ ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள்‌ கொண்டுவரும்‌ நெல்லை உடனடியாகக்‌ கொள்முதல்‌ செய்ய வேண்டும்‌ என்று சட்டமன்றத்திலும்‌, பேட்டிகள்‌ வாயிலாகவும்‌, அறிக்கைகள்‌ வாயிலாகவும்‌ பலமுறை இந்த அரசின்‌ கவனத்திற்குக்‌ கொண்டு சென்றதாகவும், அப்படி இருந்தும்‌ இந்த ஆட்சியாளர்கள்‌ அலட்சியப்படுத்தியதாகத் தெரிவித்துள்ள அவர், அப்படியே நெல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டாலும்‌, நெல்மணிகள்‌ மழையில்‌ நனைந்து வீணாகிறது என்றும்‌, அதனை உடனடியாக, முறையாகப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கக்‌ கோரி பலமுறை இந்த அரசிடம்‌ எடுத்துக்‌ கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின்‌ நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌, கொள்முதல்‌ செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்கத்‌ தவறியதாலும்‌, குறித்த நேரத்தில்‌ அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பாததாலும்‌, பலகோடி ரூபாய்‌ மக்களின்‌ வரிப்‌ பணம்‌ இந்த அரசால்‌ விரயமாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், நெற்றி வியர்வை நிலத்தில்‌ சிந்தி, தன்னுடைய ரத்தத்தை நெல்‌ மணிகளாக விளைவித்து, இந்த அரசின்‌ கைகளில்‌ கொடுத்த அப்பாவி விவசாயிகள்‌, தங்கள்‌ உழைப்பை இந்த அரசு வீணடித்துவிட்டதே என்று எண்ணி எண்ணி ரத்தக்‌ கண்ணீர்‌ வடிக்கிறார்கள்‌ எனக் கூறியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’ – முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர்’

தமிழ்நாடு முதலமைச்சர்‌, கடந்த மாதம்‌ அரசு முறை சுற்றுப்‌ பயணம்‌ மேற்கொண்டபோது, பெண்கள்‌ ரேஷன்‌ கடைகளில்‌ வழங்கப்பட்ட புழுத்த அரிசியை அவரிடம்‌ காட்டி கோஷமிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், ரேஷன்‌ கடைகளில்‌ வழங்கப்படும்‌ அரிசி தரம்‌ இல்லாமல்‌, உண்ண முடியாத நிலையில்‌ இருப்பதால்‌, வெகுண்டெழுந்த மக்கள்‌ மத்திய அரசுக்கு அனுப்பிய புகார்களின்‌ அடிப்படையில்‌, இந்திய வாணிபக்‌ கழக அதிகாரிகள்‌ டெல்டா மாவட்டங்களில்‌ உள்ள அரசுக்குச்‌ சொந்தமான குடோன்களில்‌ ஆய்வு செய்தனர்‌. இந்த ஆய்வின்‌ மூலம்‌ சுமார்‌ 9 லட்சம்‌ டன்‌, அதாவது சுமார்‌ 92 கோடி கிலோ அரிசி மக்கள்‌ பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில்‌ உள்ளதைக் கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்களிலும்‌, இன்றைய நாளிதழ்களிலும்‌ செய்திகள்‌ வெளிவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது, கால்நடைகள்‌ கூட உண்ண முடியாத தரமில்லாத இந்த அரிசியை, ரேஷன்‌ கடைகள்‌ மூலம்‌ அப்பாவி மக்களின்‌ தலையில்‌ கட்ட விடியா திமுக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள அவர், தொட்டதற்கெல்லாம்‌ மத்திய அரசைக் குறை சொல்வதும்‌, அத்தியாவசியப்‌ பொருட்கள்‌, சொத்து வரி, வீட்டு வரி, மின்‌ கட்டணம்‌ போன்றவற்றைத் தன்னிச்சையாக உயர்த்தும்போது, மத்திய அரசு ஆணையிட்டதால்‌ தான்‌ உயர்த்தினோம்‌ எனக் கூறுவதாகச் சாடியுள்ளார். மேலும், மத்திய அரசின்‌ இந்திய உணவுக்‌ கழகம்‌ புழுத்துப்‌ பாழாய்ப்‌ போன அரிசியைப்‌ பற்றிக் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில்‌ அளிக்கப்போகிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோடிக்கணக்கான கிலோ அரிசி பாழாய்ப்‌ போனதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? எனத் தெரிவித்துள்ள அவர், இந்த அரசின்‌ அலட்சியம்‌, நிர்வாகத்‌ திறமையின்மை காரணமாக, சுமார்‌ 9 லட்சம்‌ டன்‌ அரிசிக்கு உண்டான பல கோடி ரூபாய்‌ பண இழப்பை திமுக அரசு என்ன செய்யப்‌ போகிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும்‌ எத்தனை லட்சம்‌ டன்‌ அரிசி வீணாகி உள்ளது என்பதையும்‌ இந்திய உணவுக்‌ கழகம்‌ ஆய்வு செய்ய வேண்டும்‌ என்று வலியுறுத்துவதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.