அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது. இதனிடையே சூரப்பாவிற்கு எதிராக தமிழக அரசுக்கு வந்த முறைகேடு புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், பணி நியமனத்திற்காக தான் ஒரு பைசா கூட லஞ்சமாக பெற்றதில்லை எனவும் சூரப்பா விளக்கம் அளித்தார். கடந்த சில மாதங்களாக சூரப்பாவிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆணைய நீதிபதி கலையரசன், நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், சூரப்பா மீதான விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், 15 நாட்களில் விசாரணையை முடித்து அரசிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “தேர்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. தவறு செய்தவர்கள் எங்கு சென்றாலும் தப்பிக்க முடியாது. சூரப்பா நாளை மறுநாள் பணி ஓய்வு பெறும் நிலையில், அவர் எங்கு சென்றாலும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.







