தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜீன்14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்களின்
இனப் பெருக்கத்திற்காக தமிழகத்தின் 15 கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம்
கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இந்த தடை காலம் முடிவு பெற்று 15ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்களை
பிடிப்பதற்காக சென்றனர். இந்நிலையில் பெரிய விசைப் படகுகளில் பிடிக்கப்பட்ட
மீன்கள் இன்று காசிமேடுக்கு ஏலத்துக்காக கொண்டு வரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தடைக்காலம் முடிவு பெற்ற முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று மீன்களை
வாங்குவதற்காக ஏராளமானோர் காசிமேட்டில் கூடினர்.
ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை நோக்கியே அதிகப்படியான விசைப்படகுகள் கரைக்கு
திரும்பின. பெரிய அளவிலான வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் எதுவும் கிடைக்காததால்
அசைவ பிரியர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இருப்பினும் சிறிய அளவிலான மீன்கள்
அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. விலை சற்று அதிகமாக காணப்பட்டாலும் அசைவ
பிரியர்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு மொத்த வியாபாரிகள் மீன் ஏலக்கூடத்தில் வந்து
மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.
விலைப்பட்டியல்
வஞ்சிரம் கிலோ 1400
வவ்வாள் கிலோ 1000 முதல் 1100 வரையிலும்
சங்கரா கிலோ 400 முதல் 800 வரையிலும்
தோல் பாறை கிலோ 350
நெத்திலி கிலோ 250 முதல்
வெள்ளை ஊடான் கிலோ 150
காரப்பொடி கிலோ 100 ரூபாய்
இறால் நண்டு போன்றவை 400 முதலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் களைகட்டியது.
சுற்று வட்டாரத்தில் உள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு ஏராளமான மீனவ பெண்கள்
சில்லற வியாபாரத்திற்காக அதிகமான மீன்களை வாங்கிச் சென்றனர்.
-மணிகண்டன்