காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செப். முதல் அமல்! உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!

டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மலைப்பகுதிகளில் மதுபாட்டில்களை…

டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்,
செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மலைப்பகுதிகளில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள்
பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு,  டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப வழங்கும் திட்டத்தை மலைப்பகுதிகளில் அமல்படுத்த உத்தரவிட்டது. பின், இந்த திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  மனுதாரர்கள் தரப்பில் திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதம் முதல்  தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.