மின் கட்டண உயர்வுக்கு திமுக அரசின் தவறான அணுகுமுறையே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் மதுரை மாநகர பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு மின் இணைப்பு கொடுத்தாலும் மின்சாரம் கொடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பணி என்றும், தேவைக்கு அதிகமாகத் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறினார். மேலும், திமுக அரசின் தவறான அணுகுமுறைகள் பிற மாநிலங்களில் மின்சாரம் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் தனியார் உற்பத்தி செய்யும் 8 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு விற்கப்படுவதாகத் தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரம் 4 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களிலிருந்து 14 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வாங்குவதாகச் சாடினார்.
அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதால் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தைச் சந்திப்பதாகத் தெரிவித்த அவர் தமிழ்நாடு மின்சார துறை காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதாகவும், 2001-ஆம் ஆண்டு வரை மின்சாரத்துறை 1,000 கோடி ரூபாய்க் கடன் அளிக்கும் துறையாகச் செயல்பட்டு வந்ததாக, தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தற்போது 1.5 லட்சம் கோடி ரூபாய் மின்சாரத்துறைக்கு கடன் இருப்பதாகவும், 4500 கோடி ரூபாய் செலவு செய்து தமிழ்நாடு அரசு மின்சாரத்திற்காக நிலக்கரியை இறக்குமதி செய்து வருவதாகக் கூறினார். மேலும், 63.35 லட்சம் வீடுகள் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட உள்ளதாகத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.