9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!

மாணவிக்கு தேவையான மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட உள்ளது.

 

மதுரையில் 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், 51 வயது முதியவர் ஹரிகிருஷ்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நேர்ந்த துயரத்தை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் (சிறுமிக்கு 7 வயதாக இருந்தபோதும்) இதே நபரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியின் வாக்குமூலமும், பெற்றோர் அளித்த தகவல்களும் முதியவர் ஹரிகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தின. இந்த வழக்கில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (POCSO Act) 2012-ன் கீழ் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல் கிடைத்துள்ளது. மாணவிக்கு தேவையான மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.