மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படத்தை முடக்கப்பார்ப்பதாக இயக்குநரும், நடிகர் சிலம்பரசனின் தந்தையுமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டி உள்ளார்.
பொங்கள் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படமும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள தமது இல்லத்தில் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளை மறுநாள் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் அதனை முடக்க சிலர் சதி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
விபிஎஃப், கேளிக்கை வரி, ஜிஎஸ்டிக்கு எதிராக தாம் போராடியதால் தன்னை பழிவாங்கும் நோக்கில் ஈஸ்வரன் திரைப்படத்தின் வெளியீட்டை தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.







