தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 19ஆம் தேதி முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மிகாமல் அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என முதல்வர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், கொரோனா பரவலை தடுக்க, அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.







