டில்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
2024 மக்களவை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட இந்த கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இதில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் இன்று டெல்லி சென்றார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். டெல்லியிலுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் இரவு 9 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பில் முக்கிய விசயங்கள் பேசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் வரவுள்ள மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.







