மேற்கு வங்கமாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் இன்று மதியம் 1:22 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த பொருட்கள் பலமாக ஆடின. மேலும் நில அதிர்வை உணர்ந்த மக்கள் அச்சம் காரணமாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
முதற்கட்ட தகவல்களின் படி இந்த நிலநடுக்கமானது வங்கதேச எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தா தவிர ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகம் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் மக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர்.







