கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிய கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துறை வைகோ விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லி சேரிப் பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைப் பார்வையிட்ட மதிமுக தலைமை நிலைய செயலாளர் துறை வைகோ பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைமைத் தேர்தல் அதிகாரி மாநில ஆளுநர் தனிப்பட்ட அரசியல் கட்சி சித்தாந்தம் ஆதரவாக செயல்படுவது கண்டனத்திற்குரியது என்பதை நீதிமன்றமே கூறியுள்ளது என்றார்.
மேலும், கோவை வெடிப்பு தொடர்பாகத் தீவிரவாதிகள் செயல் என்று கண்டு பிடித்துள்ளார்கள். தமிழக பாஜக, காவல்துறையின் கவனக்குறைவு காரணமாகவே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு வைத்தது. இதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்துள்ளது இச்சம்பவத்தையும் என் ஏ.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
அத்துடன், மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் ஏற்கனவே ஷிமோகா என்ற இடத்தில் ஒத்திகை பார்த்துள்ளார். பெங்களூருவின் 2020 கலவரத்தின் போது ஈடுபட்டு இருக்கிறார். இரண்டு வருடமாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏன் இவரை ஆளுகின்ற கர்நாடகா பாஜக அரசு கண்காணிக்க வில்லை. கோவை குண்டுவெடிப்பு சம்பந்தமாகத் தமிழக அரசைக் குற்றச்சாட்டுக் கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை என கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசுக்கு ஒரு நியாயம் கர்நாடகா அரசு ஒரு நியாயமா? கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிய கூடாது. குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து குறித்து இதுவரை எப். ஐ .ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. அங்குள்ள குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அங்குள்ள பாஜக அரசின் நகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவாக நடந்துள்ளது எனவும் தெரிவித்தார்.







