தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டையொட்டி நடைபெற்றுவரும் சிறப்பு வழிபாட்டில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விழுப்புரம் திரு.வி.க சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பக்கதர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆஞ்சநேயர் சிலை முழுவதும் தங்கக் கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. கோயிலில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விஷுக்கனி தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கலிதீர்த்த அய்யனார் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். அப்பகுதி மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.