31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

போதைக் கலாச்சாரம் : அடி முதல் நுனி வரை ஆடும் தமிழ்நாடு


மரிய ரீகன் சாமிக்கண்ணு

குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை முடக்குவோம் என தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது ஒரு கலாச்சாரம் என்ற வகையிலேயே ஒரு பெரிய வலைப்பின்னல் தொழிலாகிவிட்டது. டீக்கடை முதல் பெரிய கேளிக்கை விடுதிகள் வரை திடீர் திடீர் என அரசு அதிகாரிகள் சோதனை நடத்தினாலும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கவோ, போதைப் பொருட்கள் வலையில் இளைஞர் விழுவதை நிறுத்தவோ முடியவில்லை. இந்த பின்னணியில், போதை பொருள் விற்பவர்களின் சொத்துக்களை முடக்கினால் மட்டும் போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்துவிட முடியுமா? என்ற கேள்வி தான் எழும். போதைப் பொருட்களை அதிகம் வைத்திருப்பது யார்? இந்த தொழிலில் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? அதிக அளவு போதைப் பொருட்களை பயன்படுத்துவது யார்? என்ற பின்னணியை ஆராய்ச்சி செய்தால் மலைக்க வைக்கும் பல உண்மைகள் வெளியாகும். ஒருவகையில், அரசுக்கே தண்ணீர் காட்டிக்கொண்டு இருக்கும் ஒரு பெரிய சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்திகளாக இந்த போதைப் பொருள் தொழிலில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களால், சமூகத்தின் பொது அமைதி சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுகின்றன. இதனை அனைத்தையும் எப்படி தடுக்கப் போகிறது தமிழ்நாடு அரசு?

சினிமா துறையில் போதை கலாச்சாரம்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சினிமா பிரபலங்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் கூட, சில நடிகர் நடிகைகள் போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனம் ஓட்டிய போது விபத்தை ஏற்படுத்தியதையும் செய்திகளில் பார்த்திருக்கிறோம். சில நடிகர்கள் இரவு நேரங்களில் கும்பலாக சேர்ந்து போதைப் பொருட்கள் பயன்படுத்தி கேளிக்கையில் ஈடுபட்ட கதையும் நாம் அறிந்தது தான். தக்‌ஷன் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், குட்கா உள்ளிட்ட பிற போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து சினிமா பிரபலங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். கோடிகளில் பணம் புழங்கக்கூடியது சினிமா துறை. ரசிகர்கள் பட்டாளங்களின் கொண்டாட்டத்தால் கிடைக்கும் புகழ் வெளிச்சம், கோடிக்கணக்கான பணம் கையிருப்பு என எப்போதும் சினிமா பிரபலங்கள் போதை பொருட்கள் பயன்பாட்டை கேளிக்கை விஷயமாகவே கருதுகிறார்கள். அவர்களிடம் எல்லாமுமே இருக்கும் போது வாழ்க்கையை கொண்டாட வேண்டி, கஞ்சா, குட்கா, ஹெராயின், போதை மாத்திரைகளை சினிமா பிரபலங்கள் பயன்படுத்துகிறார்கள். புகழ், பணம் உள்ளிட்டவை குவிந்து கிடக்கும் சினிமா துறையில் இருந்து போதைப் பொருள் கலாச்சாரத்தை சட்டத்தின் மூலமாக மட்டுமே தமிழ்நாடு அரசால் தடுத்து நிறுத்தி விட முடியுமா?

கஞ்சா ஒரு போதைப் பொருள் என்ற உணர்வு கூட இல்லாத இளைஞர்கள் அதை புகைப்பதை காண முடிகிறது. இந்த மனநிலைக் கொண்ட இளைஞர்கள் கூட்டம் பள்ளிகளில் இருந்தே கஞ்சா புகைக்க தொடங்கி விட்டார்கள். தனியார் அமைப்பு ஒன்று கடந்த ஆண்டில் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்ட பள்ளி மாணவர்களிடம் நடத்திய கள ஆய்வில், 9% பேர் மது, கஞ்சா, போதை தரும் பாக்கு போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பல இளைஞர்கள் போதைப்பொருளுக்குள் சிக்கித்தவிக்கிறார்கள். அவர்களை மீட்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு அரசு?

போதை பொருளுக்காக நடக்கும் சமூக விரோதம்:

திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சிறார்களிடம் நடத்திய விசாரணையில் 87% பேர் மது, போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என சிறார் குற்றவாளிகள் குறித்த ஆய்வில் தெரியவருகிறது. போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி படிப்பை பாதியில் விட்டுவிட்டு, தொழில் செய்யும் சூழலும் இல்லாத இளைஞர்கள் தங்களின் போதை தேவைக்காக அடுத்து நாடும் இடமாக வழிப்பறியில் ஈடுபடுகின்றன. போதைப் பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாததால், சாலையில் நடந்து செல்லும் பெண்களின் நகைகளைப் பறிப்பது. செல்ஃபோன்களை திருடுவது உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். உள்ளூர் மட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பவர்களை தட்டிக்கேட்கும் இளைஞர்கள், போதை கடத்தல், விற்பனை கும்பல்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்களும் நடக்கவே செய்துள்ளன. தென் மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்களை விற்ற கும்பலை தட்டிக்கேட்டதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்களை கொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளது.

போதை பொருள் விற்கும் கும்பல், உள்ளூர் மட்டத்தில் அதிகாரம் மிக்கதாக இருப்பதால் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியத்தைக் கூட மக்கள் இழக்கிறார்கள். அப்படியே அவர்களை தட்டிக்கேட்கும் இளைஞர்களும் உயிரை விடும் சூழல் தான் தமிழ்நாட்டில் இருக்கிறது.

சென்னை, கொழும்பு நகரங்கள் போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல், விநியோகம் அதிகம் நடக்கும் இடங்களாக இருக்கின்றன. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள் கடத்தல் எளிதாக நடக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் பணம் புழங்கும் ஒரு துறையாக இது உருவெடுத்துள்ளதால், இந்த வலை பின்னலின் பின்னணியில் பெரிய கூட்டமே ஈடுபட்டுள்ளது. இதனால், பெரிய அளவிலான கடத்தல் தொடங்கி உள்ளூரில் பொதுமக்களை மிரட்டும் ரவுடிகள் வரை இந்த போதை பொருள் பயன்பாட்டில் பலர் இருப்பதால் இதை தடுப்பது என்பது தமிழ்நாடு அரசிற்கே மிகப்பெரிய தலைவலியாக இருக்கும்.

வாழ்க்கையிலிருந்து அந்நியமாகும் இளைஞர்கள்:

மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் உயரவில்லை. இளைஞர்கள், பொதுமக்களின் பணி நிலையும் மோசமாக உள்ளது. சமூகத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாலும், பொருளாதார நெருக்கடி கூடியதாலும் வாழ்க்கையை எதிர்த்து போராடும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

வாழ்வதே போராட்டமாகிப்போன வாழ்க்கையில் அந்நியமாகி, தன்னிலிருந்து அந்நியமாகி இளைஞர்கள் பலர் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதைத் தடுக்க கடுமையான சட்டம் தேவை என்றாலும் இதை சமூக சமூக – பொருளாதார பிரச்னையில் இருந்து தீர்வு காண வேண்டும். அதே சமயத்தில், சமூக பொருளாதார பிரச்னையில் இருந்து இதை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் சட்டத்தின் மூலமாக தான் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க முயற்சிக்கிறார்கள். மேட்டுக்குடி பின்னணியில் இருப்பவர்கள் தான் போதைப் பொருள் புழக்கத்தின் பிதாமகர்களாக இருக்கிறார்கள். இதை எதிர்க்கும் இளைஞர்கள் உள்ளுர் ரவுடிகளால் கொலை செய்யப்படுகிறார்கள். அரசும் காவல் துறையும் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading