பில்கிஸ் பானு வழக்கில் நான் விசாரிப்பதை தடுக்க நினைக்கிறீர்களா..? என விடுதலை செய்யப்பட்ட 11பேரின் வழக்கறிஞர்களிடம் நீதிபதி ஜோசப் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
2002ம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்னும் 5 மாத கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவரது 3 வயது மகள் உள்பட, அவரின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு ஆயுள் தண்டை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த வழக்கின் குற்றவாளிகளை நன்னடத்தை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இவர்களது விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து ஓய்வு பெற்ற 134 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த வருடம் புதிதாக பதிவியேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப்ஜங், முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர், முன்னாள் வெளியுறவு செயலாளர்கள் சிவசங்கர் மேனன், சுஜாதா சிங் உள்ளிட்டோர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டனர்.
பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையின்போது, 11 பேரின் விடுதலைக்கான அடிப்படை காரணங்களைக் கேட்ட உச்சநீதிமன்றம், அதற்கான உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 11 பேர் விடுதலை ஆவணங்களைத் தாக்கல் செய்ய குஜராத் மற்றும் மத்திய அரசுகள் ஆரம்பத்தில் தாக்கல் செய்ய மறுப்பு தெரிவித்தன.
இதுதொடர்பாக மறுசீராய்வு மனு ஒன்றையும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். “பில்கிஸ் பானு வழக்கில் இன்று நடந்தது நாளை வேறு ஒருவருக்கும் நடக்கலாம். அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட காரணத்தை அரசு கூறாவிட்டால் உச்சநீதிமன்றமே ஒரு முடிவுக்கு வர நேரிடும்” எனக் கடுமையாக எச்சரித்ததுடன், மே 2ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
அதன்படி நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா குஜராத் அரசு மற்றும் மத்திய அரசின் தரப்பில் வாதாடினார். நீதிபதிகள் ஜோசப் மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது விடுதலையான 11 பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் கோரினர்.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் கடுமையாக அவர்களை சாடினர். விசாரணையே நடைபெறக் கூடாது என நினைக்கிறீர்களா? என காட்டமாக கேள்வி எழுப்பினர். வருகிற மே 19-க்குப் பின் கோடை விடுமுறை தொடங்குகிறது; ஜூன் 16-ந் தேதி நான் ஓய்வு பெறுகிறேன். இப்படி அவகாசம் கேட்டு இவ்வழக்கை நான் விசாரிப்பதையே தடுக்க நினைக்கிறீர்களா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் இறுதி விசாரணை வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது. நீதிபதியின் காட்டமான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.