வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று திமுகதான் ஆட்சி அமைக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சட்டத்துறையின் 2வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட பல முக்கிய திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திமுக சட்டத்துறை நிர்வாகிகளுக்கு திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். பின்னர், மேடையில் பேசிய அவர்,
சட்ட கருத்தரங்கம் அரசியல் கருத்தரங்கம் என்று பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். மேலும் வழக்கறிஞரிடம் பேசும் போது கவனமாக பேசவேண்டும் என சொல்லுவார்கள் என்றும், நீங்கள் சட்ட நீதிக்காக பேசுகிறீர்கள் நான் சமூக நீதிக்காக பேசுகிறேன் என்றும் கூறினார்.
மக்கள் மன்றம் மட்டுமல்ல நீதிமன்றத்தில் பேசவேண்டிய நெருக்கடி இப்போது உள்ளது என்று கூறிய ஸ்டாலின், வாசல் இல்லாமல் வீடு கட்ட முடியாது, அதேபோல், வழக்கறிஞர்கள் இல்லாமல் அரசியல் கட்சி நடத்த முடியாது என்றும் எல்லா இயக்கங்களையும் வளர்த்தவர்கள் வழக்கறிஞர்கள் தான், அதை நான் அடித்து சொல்வேன் என்று கூறியவர், அதற்கு உதாரணமாக, வழக்கறிஞர்களால் நிரம்பி வழிந்த கட்சி நீதி கட்சி, அதன் தொடர்சியாக, திமுகவிலும் வழக்கறிஞர்கள் நிரம்பி வழிகின்றனர் என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, பல நீதிபதிகளையும் உருவாக்கிய கட்சி தான் திமுக
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது டான்சி வழக்கு தொடரும் பனியில் தற்போது சட்டத்துறை தலைவராக இருக்கும், சண்முக சுந்தரம் ஈடுபட்டிருந்த போது, அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும் தமிழ் சமூகத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் ஓயாமல் உழைத்த கருணாநிதியின் விருப்பம், அண்ணா அருகே, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்பது. எங்கே அது நிறாசையாக ஆகிவிடுமோ என நினைத்தப்போது, சட்டத்துறை சம்மட்டி அடியால், அதிமுக அரசு மீது ஓங்கி அடித்தது. அதை நான் மறக்க மாட்டேன்.
அப்போது நான் என்ன மன நிலையில் இருந்தேன் என்று அனைவருக்கும் தெரியும் நீங்கள் எல்லாம் தலைவரை இழந்தீர்கள் நான் தலைவரோடு சேர்த்து என் தந்தையும் இழந்தேன் என வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், தேர்தலுக்கு பிறகு நாம் தான் ஆட்சிக்கு வந்து அமர போகிறோம், அதிமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் நாம் ஊழல் பட்டியல் கொடுத்தோம், இன்னொரு பட்டியலும் கொடுக்க உள்ளோம். தேர்தலுக்காக நாங்கள் நடிக்க வில்லை. ஆளுநர் முடிவெடுப்பார் என நாங்கள் காத்திருக்க வில்லை. தேர்தல் முடிந்து நாம் தான் ஆட்சி அமைப்போம். அப்போது, அதிமுக ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம், அவர்களை சிறையில் தள்ளுவோம் என ஸ்டாலின் உறுதிபூண்டார்.







