புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்காததை கண்டித்து, திமுக உறுப்பினர்கள் பள்ளி சீருடை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22ம் தேதி பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால், புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். முதலாவதாக சபையில் மறைந்த ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி பேரவையில்
தீர்மானம் நிறைவேற்றக்கோரி திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்
வலியுறுத்தினர். மாநில அந்தஸ்து விவாகரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பேரவையில் தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார்.
மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி பேரவையில் கண்டன முழக்கங்களை
எழுப்பிய நிலையில், இது குறித்து பேரவையில் பேச மறுத்ததாலும், அரசு பள்ளி
மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
இதனிடையே அரசின் கூடுதல் செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்ட
நிலையில் பேரவையை கால வரையின்றி ஒத்தி வைத்து அறிவித்தார் சபாநாயகர் செல்வம், பேரவை தொடங்கி 25 நிமிடத்தில் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 8 மாதங்கள் ஆகியும் அரசு பள்ளி
மாணவர்களுக்கு தற்போது வரை சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்குவதற்கு
எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக சீருடை, புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு
வழங்கப்பட வேண்டிய சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை உடனடியாக அரசு வழங்கிட
வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற
உறுப்பினர்கள் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து
பள்ளி சீருடை அணிந்து, அடையாள அட்டையுடன் பையை மாட்டிக் கொண்டு சைக்கிளில்
சட்டப்பேரவை வந்தனர்.