அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இல்லை என்றும் திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் அ.தி.மு.க கூட்டணி மக்களுக்குச் சேவை செய்யும் கூட்டணி என்றும் முதலமைச்சர் கூறினார். தி.மு.க ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது இல்லை என்பதால், பரப்புரையில் அவர்களால் அதனைக் கூற முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற 1 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்றார். மத்தியிலும், மாநிலத்திலும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என்றும் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.







