நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் மரணங்களுக்கு திமுக – காங்கிரஸ் கட்சிகளே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளத்தில் அதிமுக அம்மா பேரவை சார்பில் 100 க்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு தலா 1 மூடை அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று அரிசி மூடைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
“தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அதிமுக எழுச்சி மாநாடு அடித்தளம் இட்டுள்ளது. அதிமுக மாநாட்டில் மக்கள் நலனுக்காக 32 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன. திருக்குறளை தேசிய பொதுமறையாக அறிவிக்க வேண்டும், பள்ளிகளில் தமிழ் மொழி மொழியாக கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கச்சத்தீவு வழக்கில் அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய்த்துறையை பிரதிவாதியாக சேர்க்கப்பட்டது. திமுக – காங்கிரஸ் தான் கச்சத்தீவை தாரை வார்த்தது. திமுக தலைமையிலான அரசு கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பேச்சுக்களை மக்கள் நம்ப தயாராக இல்லை. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் மரணங்களுக்கு திமுக – காங்கிரஸ் கட்சிகளே பொறுப்பு.
ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன் நீர் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறுகிறார்கள். அவர் எப்போது பிரதமர் ஆவது? எப்போது நீர் தேர்வை ரத்து செய்வது? சந்திராயன் 3-ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என வேண்டுகிறேன். சந்திராயன் 3-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது.”
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.







