“அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சிவபுரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியையும், விஜயகாந்தின் திருவுருவ சிலையையும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில்,

“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 498 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. அன்னை மொழியையும் காக்க வேண்டும், அனைத்து மொழியையும் காக்க வேண்டும், இதுதான் கேப்டன் விஜயகாந்தின் கொள்கை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் தேமுதிக கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொது குழு கூட்டம் நடைபெறும்.

அதன் பின் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதில் எந்தெந்த தொகுதி தமக்கு கிடைக்கிறது என்பதும் அதற்க்கு தகுந்தார் போல் பின்னர் முடிவெடுக்கப்படும். எதுவாக இருந்தாலும் தேமுதிக இடம் பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.