சொத்துப் பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தும் அரசாணை ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சொத்துப் பத்திரங்கள் குறித்த புகார் வந்தால், அதன் மீது மாவட்ட பதிவாளரே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின், பிரிவு…

சொத்துப் பத்திரங்கள் குறித்த புகார் வந்தால், அதன் மீது மாவட்ட பதிவாளரே
விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின், பிரிவு 77 ஏ மற்றும் பிரிவு 77 பி ஆகிய
2 உட்பி்ரிவுகளை கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சேர்த்தது.  இதன்படி போலியான, தவறான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால், அவர் விசாரித்து, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், அந்த பத்திரங்களை செல்லாது என்று அறிவித்து உத்தரவு பிறப்பிக்கலாம்.  இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக் கோரி நித்யா பழனிச்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில்
விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில், பத்திரப்பதிவு சட்டத்தில் புதிதாக
இணைக்கப்பட்ட உட்பிரிவுகள் இரண்டும் சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றத்தின்
அதிகாரத்தை பறிக்கும் விதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும், நீதிமன்றம் தான் இருதரப்பிலும் விரிவான விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபார்த்து, ஒரு பத்திரம் போலியானதா இல்லையா? என்று முடிவு செய்ய முடியும்.

அதுபோன்ற அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது, மாவட்ட பதிவாளர் நீதிமன்றத்தை போல செயல்பட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சொத்துகள் மீது கடன் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும் எனவும் வாதம் வைக்கப்பட்டது.  அரசு தரப்பில், இந்த வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவில் கொண்டு வந்த 77ஏ மற்றும் 77 பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது என்ற அறிவித்து அந்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.