பொள்ளாச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மாணவர்களுக்கு சமைத்த உணவை சாப்பிட்டு, மாணவர்களிடம் உரையாடியது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவை அடுத்துள்ள சிங்கையன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை மாணவ மாணவிகள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி பள்ளியில் உள்ள சமையலறைக்கு நேராக சென்று அங்கு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் சாம்பாரை பார்வையிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் எதிர்பாராதவிதமாக மாணவர்களுக்கு சமைத்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு சுவைத்து பார்த்து மாணவர்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது, சாம்பாரில் என்னென்ன பொருட்கள் போடப்படுகிறது என அங்கிருந்த சத்துணவு பணியாளிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து பள்ளி வகுப்பறைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாணவி ஒருவரை அழைத்து வாய்ப்பாடு சொல்ல கூறினார். அப்போது மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பித்தனர். அதன் பின்னர் அங்கிருந்த பள்ளி மாணவர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேள்விகள் கேட்டார். அப்போது மாணவர்கள் போலீஸ், இன்ஜினியர் எனக் கூறினர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறிய அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பள்ளிகளின் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு சென்றார்.