மதிமுகவில் துரை வைகோவின் பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து அரசியலில் களம் கண்டவர் வைகோ. திமுக தலைவராக இருந்த மு கருணாநிதி, 90களில் முக ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார். இதனால் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்த வைகோ போன்றவர்கள் மறைமுகமாக எதிர்க்க தொடங்கினர். இந்நிலையில் 1993ஆம் ஆண்டு வைகோ விடுதலை புலிகள் உதவியுடன் திமுக தலைவர் கருணாநிதியை கொல்ல முயன்றதாக திமுக தலைமை அவர் அபாண்ட குற்றச்சாட்டு ஒன்றை கூறியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத வைகோ சற்று கலங்கி போனார். இதனை கண்டு கொந்தளித்த மாவட்டச் செயலாளர்கள் 19 பேர் வைகோவிற்கு ஆதரவாக களமிறங்கினர். திமுகவின் சொத்துக்களும், உதயசூரியன் சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற அளவிற்கு பிரச்சனை வீரியம்பெற்றது. பின்னர் வைகோ தலைமையில் மதிமுக என்ற கட்சி உருவானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படிபட்ட காலத்தில் வைகோவுக்கு உறுதுணையாக இருந்த மாவட்டச் செயலாளர்கள் சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை அப்படியே தருகிறோம். ‘ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட. கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்’, இப்படி ஒரு செய்தி குறிப்பு ஊடகங்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மதிமுக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று மதிமுகவின் 28ஆவது பொதுக்குழுக் கூட்டம் வைகோ தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம், வைகோவின் வாரிசு, துரை வைகோவின் அரசியல் வருகை எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் மதிமுக நிர்வாகிகள் சிலர், ஒரு படி மேலேச் சென்று, திமுகவுடன் மதிமுகவை இணைத்துவிடலாம் என்றெல்லாம் பொதுவெளியில் பேசத் தொடங்கினர். இந்நிலையில் சில மாவட்டச் செயலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைப் பாய்ந்துள்ளது. மதிமுகவை வைகோவின் காலத்திற்கு பின்னர் கட்டி காப்பாற்ற ஒரு நல்ல தலைமை தேவை. அந்த வகையில் துரை வைகோ அதற்கு சரியான் சாய்ஸ் என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கருதுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே அவர் கட்சியில் பொறுப்பிற்கு வந்துள்ளார். ஆனால் தேவையின்றி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்கள் மீது தலைமை சரியான நடவடிக்கையே எடுத்துள்ளது என பெரும்பாலான நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இராமானுஜம்.கி