திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீடு ஆர்.எம்.காலனி 1-வது கிராஸில் உள்ளது. இங்கு இன்று காலை சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் மகேஸ்வரி பணியாற்றிய போது பொருள்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி பெரியகுளம் நகராட்சி ஆணையராக பணியை தொடங்கினார். பின்னர் குமாரபாளையம், காஞ்சிபுரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.இதே போல் காஞ்சிபுரத்தில் துப்புரவு ஆய்வாளராக இருந்த இக்பால், ரமேஷ் குமார், ராமகிருஷ்ணன் மற்றும் உதவியாளராக இருந்த சந்த வேலு ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.






