ராஜாத்தி அம்மாளுக்குச் செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருப்பதால் அதற்கான உயர் சிகிச்சை வழங்குவதற்காக அவரை நேற்று ஜெர்மன் அழைத்துச் சென்றுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் செரிமானக் கோளாறு காரணமாகக் கடந்த சில மாதங்களாக அவஸ்தைப் பட்டு வருகிறார். திட உணவுகள் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் திரவ வகை உணவுகளையே அவர் உட்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘‘அதிகாரிகள் தங்களின் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்’ – மேற்கு வங்க அரசு’
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு ராஜாத்தி அம்மாள் அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயர் சிகிச்சை வழங்குவதற்காகச் சென்னை விமான நிலையம் அழைத்துவரப்பட்ட ராஜாத்தி அம்மாள் விமானம் மூலமாக ஜெர்மன் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் கனிமொழி எம்பி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர். அடுத்த பத்து நாட்களுக்கு அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்ப இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.








