தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் கல்லூரி கட்டிடத்தையும் திருச்சி பைபாஸ் சாலையில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அவர் சட்டக்கல்லூரி அருகே ரூ.32 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பார்க் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள 28 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சுமார் ரூ. 2 ஆயிரத்து 559 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 49 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், அவர் ரூ.205 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து நிகழ்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது ;

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரீகம் ஓங்கி இருந்ததற்கான கீழடி தடயம் கிடைத்த மண் இந்த சிவகங்கை மண். ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற வேலுநாச்சியார் வாழ்ந்த மண்.

தமிழ்நாடு வளர்ந்துள்ளது என்றும் வேலைவாய்ப்பில் முன்னிலையில் உள்ளதாகவும் மத்திய அரசு புள்ளிவிவரங்கள் பாராட்டி உள்ளது. ஆனால் பிரதமர் மோடி தேர்தலுக்காக பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் பேசுகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது. கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை காலி செய்துவிட்டு, வேறு பெயரில் புது திட்டம் கொண்டு வந்துள்ளார்கள்.

விக்சித் பாரத் திட்டம் திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். மீண்டும் திமுக ஆட்சிதான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.