தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக வெளிவந்த தகவல் வதந்தி எனவும், தான் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் பயணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை உடைத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரான பிறகு, உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே மீது ஏற்பட்ட அனுதாபத்தின் காரணமாக மக்கள் மத்தியில் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு எதிராக திரும்பலாம் என்று அந்தக் கட்சி கருதுவதாகவும், இந்நிகழ்வு வரும் 2024
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் சில ரகசிய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்திலும், சிவசேனாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்யக்கூடும் என்ற செய்தி
வெளியானதை தொடர்ந்து மீண்டும் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு நிலவ துவங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த சிக்கலை தீர்க்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவாரை பாரதிய ஜனதா கட்சி ரகசியமாக அழைத்து பேசியுள்ளதாகவும், அவரும் முதல்வர் பதவிக்கான முயற்சியில் மிக தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தகவல் சில தினங்களாக கசிந்து வந்தது. இதில் குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்எல்ஏக்களில் சுமார் 40 பேர் அஜித் பவாரின் முயற்சிக்கு ஆதரவளிக்க ஒப்புதல் கையொப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த விஷயத்தில் அஜித் பவார் நீண்ட நாட்களாக மௌனமாக இருந்து வந்த நிலையில், இன்று அவர் தேசியவாத காங்கிரசை விட்டு தான் செல்லப்போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி எனவும், தான் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் பயணிக்க போவதாகவும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற செய்திகளை வெளியிட்டதற்காக ஊடகங்களை விமர்சித்த அஜித் பவார், எந்த எம்.எல்.ஏ-விடமும் தான் கையெழுத்து வாங்கவில்லை எனவும் , எம்.எல்.ஏக்கள் என்னை கட்சி ரீதியாகத்தான் சந்திக்க வந்தனர். இது வழக்கமான நடவடிக்கை தான் வேறு எந்த காரணமும் கிடையாது. இனியாவது அனைத்து வதந்திகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற வதந்திகளால், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர். இனி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா