உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்லக் காரணமே நீட் தேர்வுதான் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய பொன்முடி, பேச்சு, கலைப் போட்டிகளை அனைத்து கல்லூரிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சுப் போட்டியில் பங்கேற்போர் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், வரலாற்றை அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
விரும்பியதை படிக்க ஆசை உள்ளது, ஆனால் விரும்பியது கிடைக்கவில்லை. இதனை நிறைவேற்றுவதற்காகத்தான் “நான் முதல்வன்” என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், “இன்று தமிழ்நாட்டில் பேச்சாற்றல், பாடம் எடுக்கும் திறனை வளர்த்தெடுத்துள்ளது திராவிட இயக்கம்” என்றும் கூறினார்.
மேலும், ஏன் ஸ்டாலின் இந்தியை எதிர்க்கிறார் என்று கேட்கிறார்கள், இந்தி படித்தால் வேலை கிடைத்துவிடுமா? என்று கேள்வி எழுப்பிய பொன்முடி, இந்தி தெரிந்தவர்கள் தமிழ்நாடு வந்து பானிபூரி விற்பனை செய்கிறார்கள். இந்தியை படிக்க வேண்டாம் என்று எங்கும் நாங்கள் சொல்லவில்லை. 3வது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம்; அதில் தவறில்லை.இந்தி திணிப்பைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் விவரித்தார்.
உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்வதற்கு காரணமே நீட் தேர்வு தான், இங்கு அதிக கட்டணம் என்பதால் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர், உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பும் பொறியியல் மாணவர்கள் விருப்பப்பட்டால் இங்குள்ள கல்லூரிகளில் அவர்கள் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.








