திமுக ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்து திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள நீண்ட நாட்களாக தீர்க்காமல் இருக்கும் முக்கியமான 10 பிரச்னைகள் குறித்து முதலமைச்சருக்கு மனு அளிக்கலாம் என்று முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சட்டமன்ற தொகுதியில் இருக்கும் 10 பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க கடிதம் வந்தது . அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இருக்கும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளோம். சாலைகள் மோசமாக இருப்பதால் பயணிக்க முடியாத நிலை இருக்கின்றது. இதை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வலியுறுத்தி இருக்கின்றோம். மாநகராட்சி சாலைகள் மோசமாக இருப்பதால் மக்கள் சிரம்படுகின்றனர். அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்ட 500 சாலைகளை இந்த அரசு ரத்து செய்தது. அந்த சாலைகள் போடப்பட வேண்டும் என்று கூறினார்.
அதிமுக ஆட்சியில் துவங்கிய மேம்பால பணிகளை வேகமாக செய்ய வேண்டும். மெட்ரோ ரயில் திட்ட பணிகள் வேகப்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அனைத்து பணிகளும் வேகமாக முடிக்க வேண்டும். அத்திகடவு அவினாசி திட்டம் விரைவாக முடிக்க வேண்டும். கோவையில் தண்ணீர் விநியோகம் சரியாக இல்லை.
இப்போது இருக்கின்ற திமுக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெள்ளலூர் பேருந்து நிலையம் 50 சதவீதம் கட்டிய நிலையில் உள்நோக்கத்தோடு நிறுத்தி இருக்கின்றனர். ஆட்சியரிடம் இந்த பணிகள் தொடர வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றோம்.
சென்னையை போன்று கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டம், சாலை விரிவாக்கம், ஏர்போர்ட் விரிவாக்கம், புதிய கல்லூரிகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அவசியமான திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் திமுக அரசு எதையும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்து திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்த வேண்டும் என்பது தான் கோரிக்கை என்று கூறினார்.
ஊழல் வழக்கில் மத்திய அரசு வழகறிஞர் ஆஜராக திமுக எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.







