அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் ஒரு மாதத்திற்கு நுழைய அனுமதி இல்லை.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் ஜூலை 20 ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நுழைய அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அறிவித்து இருந்தது. அது நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் தொண்டர்கள் வர வேண்டாம் என்ற அறிவிப்பு பலகை இன்னும் அகற்றப்படவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து, அலுவலக ஊழியர்கள் கூறியது: கடந்த ஜூலை 11 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவகத்தில் நுழைந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றது மட்டுமின்றி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இது குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் தொண்டர்கள் தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும் அதன் சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தொடர்ந்து, அன்று நடந்த வன்முறை மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரம் தொடர்பாக காவல் துறை சார்பில் இன்னும் விசாரணை முடிவடையாமல் இருப்பதாலும், தலைமை அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருப்பதாலும் தொண்டர்களை அனுமதிக்காமல் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், அலுவலக வாசலில் 15 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.