தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் 4 பேர் மட்டுமே டெங்குவால் உயிரிழந்திருப்பதாகவும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனரகத்தில் எலிக்காய்ச்சலை கண்டறியக்கூடிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.எம்.எஸ்.வளாகத்தில் லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 இடங்களில் இந்த ஆய்வகம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை எலி காய்ச்சலை கண்டறிய எலிசா என்ற பரிசோதனை உதவியது. இனி எலி காய்ச்சல் நோய் குறித்து கண்டறிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் உதவியாக இருக்கும் என பேசினார்.
மேலும், எலி காய்ச்சலால் தமிழகத்தில் 2018 ம் ஆண்டு 2 பேர் மரணம் அடைந்தனர். இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் பேரில் 10 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். சிறிய அளவிலான காய்ச்சல், கண் எரிச்சல்,கண் சிவத்தல் எலி காய்ச்சல் அறிகுறி, உடனே சிகிச்சை எடுத்து கொண்டால் பாதிப்பு இருக்காது என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் காலாவதியான மருந்து கையிருப்பு வைந்திருந்தால் அது குற்றமாகும். காலாவதியான மருந்துகள் வைத்திருப்பது குறித்து அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நேற்று நீதிமன்றத்தில் மாவட்டத்திற்கு ஒரு பறக்கும் படை அமைக்க சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
டெங்குவால் தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் 377 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2017 – 18 டெங்குவால் உயிரிழப்பு அதிகம் . ஆனால் கடந்த 11 மாதங்களில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது, டெங்கு பாதிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
டெங்குவால் தமிழகத்தில் 377 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இதில் 106 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றார். தொடர்ந்து சென்னை கிண்டி கிங்ஸ் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் பேசினார்.








