டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரது காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறையினர் கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9ம்) பிற்பகல் 2:30 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் நீதிபதி ஸ்வா்ண கந்த ஷர்மா தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது.
- குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக முடியும், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
- சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டம் என இருவேறு நீதியை நீதிமன்றம் கடைபிடிக்க முடியாது.
- அரசியல் காரணங்களை நீதிமன்றத்தின்முன் வாதமாக முன்வைக்க முடியாது
- இந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவாலுக்கு இடையிலானதே தவிர, ஒன்றிய அரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான மோதல் அல்ல.
- அமலாக்கத்துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. கைதை ரத்து செய்ய முடியாது
இவ்வாறு நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.







