டெல்லி கார் வெடிப்பு : தற்கொலைப்படை தாக்குதல் – என்ஐஏ பரபரப்பு தகவல்

டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவமானது தற்கொலைப்படை தாக்குதல் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்து உள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து காஷ்மீர், அரியானா, உத்தர பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் டாக்டர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் வழக்கில் தொடர்புடைய ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் உறுப்பினர் அங்கீகாரத்திற்கு இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் , உமர் முகமதுவுக்கு உதவியாக செயல்பட்டு வந்த அமீர் ரஷித் அலி என்பவரை டெல்லியில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி உமரிடம் கொடுத்ததும் அமீர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் டெல்லி சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.