ஆஃப்பாயில் வர தாமதமானதால் போதையில் ஓட்டலை சூறையாடிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் அருண்குமார் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது நண்பர் விஜி என்பவருடன் மது அருந்திவிட்டு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் ஆர்டர் செய்த ஆஃப்பாயில் வர தாமதமானதால் கடையில் பணிபுரியும் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கடை உரிமையாளர் மதுபோதையில் இருந்த காவலர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதில் மேலும் கோபமடைந்த அவர்கள் ஹோட்டலில் உள்ள நாற்காலிகளை வீசி பொருட்களை உடைத்து கடையை சூறையாடினர். இதில், கடை உரிமையாளரின் மனைவிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் பாலசுப்பிரமணியன், அருண்குமார் அவரது நண்பர் விஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய எஸ்பி ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள விஜியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.







