பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைந்துள்ளது. தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக என்ஐஏ-வின் கட்டுப்பாட்டு அறை எண் வெளியிடப்பட்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மிரட்டல்கள் வழக்கமாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குதான் வரும். ஆனால், என்ஐஏ அலுவலகத்துக்கே தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.
இதனைத் தொடர்ந்து, மர்ம நபர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை வைத்து சென்னை காவல்துறையினருடன், என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் ஏற்கனவே இதுபோன்று மிரட்டல் விடுத்த நபரா? அல்லது புதிதாக மிரட்டல் விடுக்கும் நபரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.