இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது
இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி இரவு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. அவரது மறைவிற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 11ம் தேதி நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அந்நாளில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய நாள் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.







