இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவனை ’கொன்ற’மனைவி: இறந்தவர் உயிருடன் வந்ததால் ’திடுக்’

இன்சூரன்ஸ் பணத்துக்காகக் கணவனை ’கொன்ற’ மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள கத்வாடா பகுதியில் வசித்து வந்தவர் நிமேஷ் மராத்தி (48). கூலி தொழிலாளி. இவர் மனைவி நந்தா.…

இன்சூரன்ஸ் பணத்துக்காகக் கணவனை ’கொன்ற’ மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள கத்வாடா பகுதியில் வசித்து வந்தவர் நிமேஷ் மராத்தி (48). கூலி தொழிலாளி. இவர் மனைவி நந்தா. இவர்களுக்கு 3 மகள்கள். திருமணம் முடிந்து அவர்கள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

மூன்று வருடங்களுக்கு முன், தன் கணவர் நிமேஷ் இறந்துவிட்டதாக, அகமதாபாத் மாநகராட்சியில் இறப்புச் சான்றிதழ் பெற்றார், நந்தா. இதற்காக, நிமேஷ் மாரடைப்பில் இறந்ததாக மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் பெற்றார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த ரவீந்திர கொடேகர் என்பவர் உதவியுள்ளார்.

அந்த சான்றிதழை வைத்து நிமேஷ் மராத்தி பணம் செலுத்தி வந்த, 2 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இருந்து பணம் பெற்றுள்ளார். மொத்தத் தொகை ரூ.18 லட்சம். பணத்தை வாங்கிக்கொண்டு ஜாலியாக வாழ்ந்து வந்திருக்கிறார், நந்தா.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் திடீரென்று அகமதாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த நிமேஷ், தான் இறந்து போனதாக பொய் சான்றிதழ் பெற்று தனது மனைவி இன்சூரன்ஸ் பெற்றுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார் . இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் கூறியதாவது:
எனக்கு சரியாக வேலை அமையவில்லை என்பதால், கடந்த 2019 ஆம் ஆண்டு என் சொந்த ஊரான மத்தியபிரதேச மாநிலம் புர்ஹன்பூருக்கு செல்லும்படி கூறினார், என் மனைவி நந்தா. அவர் சொன்னதை கேட்டுச் சென்றேன். வாடகை வீட்டில் குடியிருந்த என் மனைவி, மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் 3 மாதத்துக்கு முன், அகமதாபாத்துக்கு வந்து என் மனைவியை சந்தித்தேன். ஆனால், அவர் என்னை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் சாலைகளில் படுத்து உறங்கி பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தேன். சமீபத்தில்தான் நான் இறந்துவிட்டதாக பொய்யாக சான்றிதழ் பெற்று, இன்சூரன்ஸ் பணத்தை அவர் வாங்கியிருப்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், நந்தாவையும் அவருக்கு உதவியர்களையும் கைது செய்துள்ளனர். இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவன் இறந்துவிட்டதாக மனைவியே பொய் சான்றிதழ் பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.