உள்கட்டமைப்பு காரணங்களுக்காக மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது – அமைச்சர் மா.சுப்ரமணியன்

உள்கட்டமைப்பு காரணங்களுக்காக மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தேசிய…

உள்கட்டமைப்பு காரணங்களுக்காக மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதியுடன் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த நிலையில்  தற்போது மூன்று மருத்துவக் கல்லூரிகள் அதன் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தலா 500 எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை , திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி என மூன்று கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் மூன்று கல்லூரிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு கல்லூரிக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவுக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து நடப்பாண்டு மருத்துவ கல்வி இடங்களை தக்க வைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாவது..

”பயோமெட்ரிக் காரணத்தால் ரத்து செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. சிறிய அளவிலான உள்கட்டமைப்பு காரணங்களை வைத்து ஒட்டுமொத்தமாக அங்கீகாரத்தை ரத்து செய்வது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவின் மூலம் மாநிலத்தின் மீது பாகுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு எதிராக குறை சொல்கின்றன.  மருத்துவ கல்லூரி ரத்து செய்யும் முடிவுக்கு  எதிராக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தை நேரில் சென்று சந்திக்க உள்ளோம். ” என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.