இரவு நேர ஊரடங்கு குறித்து வரும் 31ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் தரவு அலகு (Data Cell) அறையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சித்தா, ஆயுர்வேத்துடன் கூடிய 1,542 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் ஆகியவற்றின் மருத்துவ செயல்பாடுகள் குறித்து அறிவதற்கு டேட்டா செல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இரவு நேர ஊரடங்கு குறித்து வருகிற 31ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் தகவலளித்தார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பான அமமுக கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் எழுப்பிய கேள்விக்கு, அனைத்து கட்சிகளின் கூட்டங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே அனுமதி அளிக்கப்படுகிறது என பதிலளித்தார். மேலும், நீட் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து இன்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு குடியரசு தலைவரைச் சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.






