வெற்றிக்கோப்பையுடன் சென்னை வந்தடைந்த சிஎஸ்கே அணியினர் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

  ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய  சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

 

ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய  சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்னர் இரவு 12.10 மணிக்கு தொடங்கிய போட்டி, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி வெற்றி பெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெயிக்வாடும், டெவன் கான்வேயும் கைகோர்த்து நல்ல தொடக்கத்தை வெளிப்படுத்தினர். 26 ரன்னில் கெய்கவாட் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து கான்வேயும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹானே, ராயுடுவும் ஆட்டமிழக்க, கேப்டன் தோனி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

சென்னை அணிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்த ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதிசெய்தார். வெற்றி பெற்றதும் கேமராக்கள் அனைத்தும் தோனியை நோக்கி திரும்ப தன்னை நோக்கி வந்த ஜடேJஜாவை தூக்கி ஆனந்த கண்ணீர் மல்க கொண்டாடினார் தோனி.

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியுடன் இந்த சாதனையை சமன் செய்தது. மேலும், சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு கோப்பையுடன் 20 கோடி ரூபாயும், 2வது இடம் பிடித்த குஜராத் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சிஎஸ்கே அணி வெற்றிக் கோப்பையுடன் இன்று சென்னை வந்தடைந்தது. இவர்களுடன் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்னை வந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் பட்டாளம் சென்னை விமான நிலையத்தில் திரண்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.