காணும் பொங்கல் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு தலைமை காவல் இயக்குனர், சைலேந்திர பாபு பெண்களின் முழு பாதுகாப்பே முக்கியம் என தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கன்னியாகுமரி கடற்கரை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காணும் பொங்கலையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை சார்பில் செய்யப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு தலைமை காவல் இயக்குனர் சைலேந்திர பாபு, தனியாளாக வாகனம் ஓட்டி சென்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அதை தொடர்ந்து, கடற்கரையில் குவிந்திருந்த மக்களை சந்தித்த சைலேந்திர பாபு, அவர்களுக்கு கை கொடுத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். டிஜிபியை எதிர்பாராத வகையில் பார்த்த மகிழ்ச்சியில் அங்கிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் டிஜிபியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு,
பொதுமக்களுக்கும் – காவல்துறைக்கும் நல்லுறவை ஏற்படுத்த காணும் பொங்கலை காவல்துறை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.பெண்கள் முழு பாதுகாப்பை உணர்வது தான் மிக முக்கியம் என கூறிய அவர், காணும் பொங்கல் அன்று கடலில் கால் நனைக்க பலருக்கும் விருப்பம் இருந்தாலும், கூட்டம் அதிகரிக்கும் சமயங்களில் போதுமான பாதுகப்பு வழங்க முடியாது என்பதால், இன்று
கடலில் குளிக்க தடை விதித்திருப்பதாகவும், பொதுமக்களும் இதை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கூறினார்.
போதை பொருள் பயன்பாட்டு குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் காலப்போக்கில் போதை பொருள் பயன்படுத்தாத நிலை ஏற்படும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.