இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் முன்வைத்த அரபு இஸ்ரேலிய நடிகை மைசா அப்துல் ஹாதி கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில் 1,756 குழந்தைகள் உட்பட குறைந்தது 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 13,561 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 19வது நாளாக நடைபெற்று வரும் போரில் இருதரப்பில் இருந்தும் சுமார் 7000பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 7ம் தேதி நடந்த பயங்கர தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டு 210 பேரைக் கைப்பற்றிய பின்னர், சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அரபு இஸ்ரேல் நடிகையான மைசா அப்துல் ஹாதியை அவரது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்ததற்காக இஸ்ரேலிய காவல்துறை கைது செய்துள்ளது. மைசா அப்துல் ஹாதி வடக்கு இஸ்ரேலின் நஸரத் பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் 7ம் தேதி ஆரம்பான இஸ்ரேல் பாலஸ்தீன போரின் போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் ராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பு வேலிகளை புல்டோசர் வாகனங்களை கொண்டு உடைத்து எறிந்தனர். ஹமாஸ் அமைப்பினர் வேலிகளை உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் தடுப்பு வேலிகளை புல்டோசர்களை உடைக்கும் படத்தை பகிர்ந்த மைசா அப்துல்லா ஹாதி ” பெர்லின் சுவற்றை உடைந்தெறிந்த மாதிரிகளை பின்பற்றுவோம்” என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 1989ல் ஜெர்மனியைப் பிரித்த பெர்லின் சுவரின் வீழ்ச்சியைக் குறிப்பிடும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளதாகவும் அவர் ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறி இஸ்ரேல் காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.