தொல்லியல் துறை படிப்பை முடித்துள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்துறை சார்பாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அகழாய்வுப் பணிகள் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வுப் பணிகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர், நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த அவர், அகழாய்வு பணிகளில் கிடைத்த பொருட் களை பார்க்கும் போது, பண்டைய தமிழ் சமூகம், நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியம் கொண்டது என்பதை உணர முடிவதாக தெரிவித்தார்.
மாநில அரசு சார்பில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகத்தையும், மத்திய அரசு சார்பில் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தையும் வரவேற்பதாகவும் அவர் கூறினார். கடந்த காலங்களில் ஆதிச்சநல்லூரில் வெளிநாட்டினர் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஏராளமானவை வெளிநாடுகளில் இருப்பதாகவும், அதனை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.








