மதுரையில் பசுமாடு கொலை: BNS சட்டம் 325 பிரிவின் கீழ் முதல் வழக்குப்பதிவு!

மதுரையில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாடு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் BNS சட்டம் 325 பிரிவின்கீழ் முதல் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை…

மதுரையில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாடு கொலை செய்யப்பட்ட
சம்பவம் தொடர்பாக போலீசார் BNS சட்டம் 325 பிரிவின்கீழ் முதல் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி (41).  இவர் பால் கறவை
மாடுகளை வளர்த்து, அதன் மூலமாக பால் விற்பனை செய்து வருகிறார்.  இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டின் பின்புறத்தில் 2 பசுமாடுகளை கட்டி வைத்திருந்தார்.  இதனையடுத்து நேற்று அதிகாலை மாடுகளை அவிழ்க்க முருகேஸ்வரி சென்ற போது ஒரு பசுமாடு மட்டும் நின்றுகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து, முருகேஸ்வரி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் காணாமல் போன பசு மாட்டை தேடியுள்ளார்.  அப்போது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் மாடு உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது.  பசு மாட்டின் கழுத்தில் கயிறு மூலம் இறுக்கப்பட்டிருந்த தடயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.  மேலும் கால் கட்டப்பட்டிருந்த தடயம் இருந்ததாகவும், உடல் முழுவதும் அடித்தது போன்ற காயங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மாடு கட்டப்பட்டிருந்த கயிறும் காணாமல் போய் இருந்தது.

இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய குற்றவியல் சட்டங்கள்! - News7 Tamil

இதனை பார்த்து கதறி அழுத முருகேஸ்வரி, சந்தேகமடைந்து இதுகுறித்து புதூர்
காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்த காவல்துறையினர் பசுமாட்டின் உடலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து புதூர் காவல்துறையினர், புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள பாரத் நியாய சங்ஹிதா (BNS) சட்டத்தின் 325 பிரிவின் கீழ் (விலங்குகளை கொன்று, ஊனம் நஞ்சு அல்லது
பயனற்றவாறு செய்து சொத்தழிப்பு செய்தல்) இது தொடர்பாக முதன்முறையாக கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாடு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது தொடர்பாக புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.