தமிழகத்திற்கான கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.
புனேவில் இருந்து முதற்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 தடுப்பு மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. தடுப்பு மருந்துகள் உடனடியாக மாநில மருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு 10 மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முதற்கட்டமாக, சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் எனவும், ஒருவருக்கு 2 டோஸ் மருந்துகள் போடப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேபோல், யாருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மற்ற நாடுகளை போல் அரசியல் தலைவர்கள் ஏன் கொரோனா தடுப்பு மருந்துகளை போட்டுக்கொள்ள முன் வரவில்லை என செய்தியார்கள் எழுப்பிய கேள்விக்கு, வழிகாட்டு நெறிமுறைபடியும், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.







