கொரோனா தொற்று அச்சுறுத்தலையடுத்து பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் புதிய கட்டுப்பாடுகளை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய கட்டுப்பாடுகளின்படி மால்கள், வணிக நிறுவனங்கள், 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்கவும், வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் 50% பயணிகளுடன் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், உணவகங்கள், பார்கள், மதுபானக்கூடங்களில் 50% பேர் மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கலையரங்கம், அரங்கம் போன்றவற்றிலும் 50% எண்ணிக்கையுடனும் கோயில்களில் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை பொறுத்த அளவில் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படலாம் என்று புதுச்சேரி அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜன.12ம் தேதி புதுச்சேரியில் நடைபெற இருந்த தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், பிரதமர் காணொலி வாயிலாக பங்கேற்பார் என்றும் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 129 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பானது, 1,29,821 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.