நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றிலிருந்து குணமடைபவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயம் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தொற்றிலிருந்து குணமடைபவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, லேசான அறிகுறிகளுடன் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லது வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
தொடர் மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தாலே தொற்று உறுதி செய்யப்பட்ட 7வது நாளிற்கு பிறகு அவர்களை குணமடைந்தவர்களாக அறிவிக்கலாம். மீண்டும் கோவிட் தொற்று பரிசோதனை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
தொற்று உறுதியாகி அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர்கள் 93% ஆக்சிஜன் அளவு தொடர்ந்து 3 நாட்களுக்கு குறையாமல் இருந்தாலே மருத்துவர் ஆலோசனைப்படி டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். குணம் அடைவதற்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறிகளுடன் ஆக்சிஜன் உதவியால் சிகிச்சை பெற்று வரும் நபர்கள், அறிகுறிகள் அனைத்தும் விலகி தொடர்ந்து 3 நாட்கள் ஆக்சிஜன் உதவி இல்லாமல் சுவாசிக்க முடிய வேண்டும். அவர்களது இணை நோயின் அளவும் கட்டுப்பாட்டில் இருந்தால் மருத்துவர் பரிந்துரைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.
எச்ஐவி நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை எடுத்து கொன்றவர்கள் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்பின் மருத்துவர் பரிந்துரை படி டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.