ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
தமிழகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தையை மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன் கடந்த 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டமானது 3வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்றும் வரும் நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்றும் தேதியை குறிப்பிட்டால் கலைந்து செல்ல தயார் என தெரிவித்துள்ளனர்.