திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் இப்போதுவரை 131 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் திமுகவுக்கு தேவை. ஆனால் அதற்கும் மேலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த தொகுதிகள் பற்றிய விவரம்:
விளங்கோடு தொகுதியில் விஜயதாரணி, வேளச்சேரியில் ஹசன் மௌலானா, விருத்தாச்சலம் தொகுதியில் ராதாகிருஷ்ணன், குளச்சல் தொகுதியில், பிரின்ஸ், பொன்னேரியில் துரை சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை, சோளிங்கரில் முனிரத்தினம், ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா, திருவாடனையில், கருமாணிக்கம், சிவகாசியில் அசோகன், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ், நாங்குநேரியில் ரூபி மனோகரன், ஊட்டி தொகுதியில் கணேஷ், மயிலாடுதுறையில், ராஜ்குமார், காரைக்குடி தொகுதியில் மாங்குடி, கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார், தென்காசியில் பழனி, அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட ராமச்சந்திரன் ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.







