காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட்டை பெற ப.சிதம்பரம் மற்றும் கே.எஸ்.அழகிரி இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக சார்பில் கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட ஓர் இடத்திற்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸின் குரலாக நாடாளுமன்றத்தில் கூர்மையான வாதங்களை முன்வைத்து வருபவர் ப.சிதம்பரம். மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவுபெறுகிறது. அவர் தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவதையே விரும்புகிறார். எனினும், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் திறம்பட பணியாற்றிய தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கே.எஸ்.அழகிரி எதிர்பார்க்கிறார். தற்போது இரண்டு தரப்பினரும் டெல்லியில் முகாமிட்டு சீட் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.







